அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. ரூபா ஐந்து மில்லியன் பெறுமதியான மூன்று ஆள்பிணையில் அவர் விடுவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது, உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. ஆனால், வழக்கு விசாரணையின் போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து நிகழ்நிலை மூலமாக முன்னிலையாகினார்.
ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனிப்பட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் விக்ரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், சிறைச்சாலை மருத்துவமனைக்கும், பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கும் மாற்றப்பட்ட அவர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
