கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக பாடசாலைகளின் தினசரி நிர்வாக மற்றும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் கல்வி அமைச்சு சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவின் கையொப்பத்துடன் இது தொடர்பான முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி. பாடசாலை மாணவர்களின் பங்கேற்புடன் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கல்விச் சுற்றுலாக்கள் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிடப்படவுள்ள அனைத்துச் சுற்றுலாக்களும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகளின்போது எரிபொருள் பாவனையைக் கட்டுப்படுத்துமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிகளவில் எரிபொருள் செலவாகும் வாகனப் பேரணிகள் போன்றவற்றை நடத்துவது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், பாடத்திட்டங்களை முடிப்பதற்கான காலம் குறைவாக இருப்பதால், பாடசாலை நேரத்தை விழாக்கள் அல்லது வெளி நிறுவனங்களின் நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும், தற்போது நிலவும் சூழலால் பாடசாலைகள் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே இயங்கும். இதன்படி, மீண்டும் அறிவிக்கும் வரை ஒவ்வொரு புதன்கிழமையும் பாடசாலை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமைகளில் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே சுயகற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான மேலதிக பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்க அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளன. நிலைமை சீரடைந்ததும் பாடசாலைகளை வழமை போல நடத்துவது குறித்த மேலதிக அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!