பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்துக்கு வரும் ஜனாதிபதி அனுர!

ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க, யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் 01ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க விஜயம் செய்யவுள்ளார்.

யாழ்ப்பாணம் வருகை தரும் ஜனாதிபதி காலை 08.30 மணியளவில் மையிலிட்டி மீன் பிடி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

தொடர்ந்து , யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத்தினை காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார்.

அதன் பின்னர் மதியம் 1.30 மணியளவில், மண்டதீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

மறுநாள் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், தென்னை முக்கோண வலய பணிகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அதேவேளை யாழ் வருகை தரவுள்ள ஜனாதிபதி, காணி விடுவிப்பு, தையிட்டி விகாரை பிரச்சனை, பலாலி வீதி முழுமையாக திறந்து விடல் போன்றவற்றுக்கு தீர்க்கமான முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுவதுடன், செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளையும் நேரில் பார்வையிட்டு, புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!