பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு? – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

பண்டிகை காலத்தில் பெரிய வெங்காயத்தை தவிர, ஏனைய எந்தவொரு அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பண்டிகையை இலக்காகக் கொண்டு வர்த்தகர்கள் பொருட்களின் விலையினை செயற்கையாக உயர்த்த முற்பட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் சகல சலுகைகளையும் இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் மற்றும் தரமற்ற பொருட்களை நுகர்வோருக்கு வழங்கும் வர்த்தகர்களுக்கு எதிராகவும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபை நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீனி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக புத்தாண்டு காலப்பகுதியில் இனிப்புப் பண்டங்களின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், கடந்த வருடங்களைக் காட்டிலும் இந்த வருடத்தில் இனிப்புப் பண்டங்களின் கொள்வனவு வீழ்ச்சியடைந்துள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!