இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களினது துணைவேந்தர்களுக்கும், கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி, சனிக்கிழமை பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
துணைவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் குழுவின் தலைவரும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான சிரேஷ்ட பேராசிரியர் பி.எம்.சி. திலகரத்னவின் வேண்டுகோளின் பேரில் இந்தச் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகங்களில் நிலவும் போதனைசார், போதனைசாரப் பணியாளர் வெற்றிடங்களை நிரப்புதல், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடனான ஆய்வு மற்றும் கற்றல் நடவடிக்கைகளுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கைகளைக் கைச்சாத்திடல் உட்பட சமகால விடயங்கள் குறித்துப் பேசுவதற்காகவே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் செயலக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பிரதமரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் உட்பட அதிகாரிகள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.