அநுரா வெற்றி நடை: இன்று மாலை பதவியேற்பு!

இலங்கையின் 9ஆவது நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார். இன்று பிற்பகல் 2 மணியளவில் அவர் ஜனாதிபதியாகப் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியாகிக் கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின் படி அதிகூடிய வாக்குகளுடன் அவர் முன்னிலை வகிக்கின்றார். தபால் மூல வாக்களிப்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் அநுரகுமார திஸாநாயக்க 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை வசமாக்கி முதலிடம் பெற்றுள்ளார். அதேவேளை, கிழக்கு மாகாணத் தில் திருகோணமலை மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பில் அநுரகுமார முதலிடம் பெறுள்ளார்.

தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அநுர குமார அதிகூடிய வாக்குகளைப் பெற்று வருவதால் இரண்டாம் சுற்றுக்குக்குச் செல்லாமல் முதல் சுற்றிலேயே வாக்கு எண்ணும் பணிகள் நிறைவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று மாலைக்கு முன்னர் தேர்தல் முடிவுகளின் அறிவிப்புக்கள் நிறைவுக்கு வரும் என்றும், இன்று மாலை அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அநேகமாக இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அவர் ஜனாதிபதியாகப் பதவி ஏற்பார் என்று கொழும்பிலிருந்து விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தற்போது அறிவிக்கப்பட்டு வரும் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் வடக்கு, கிழக்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ முன்னிலை வகித்தாலும் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கிய செல்வம் அரியநேத்திரனுக்கும் கணிசமான வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!