போதகரின் அடாவடி குறித்த செய்தியின் எதிரொலி: ஊடக நிறுவனத்தினுள் புகுந்து அடாவடிக் குழு அச்சுறுத்தல்!

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினுள் அத்துமீறி உள் நுழைந்த கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டுள்ளது. கிறிஸ்தவ சபை ஒன்றைச் சேர்ந்த போதகர் ஒருவரின் தலைமையில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட அந்தக் குழுவில் உள்ளடங்கியிருந்தனர்.

அச்சுவேலிப் பகுதியில் உள்ள வீடொன்றினுள் கிறிஸ்தவ மத போதகர் ஒருவரின் தலைமையிலான கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த வயோதிப பெண் உட்பட இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் படி விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், போதகர் , அவரது மகன் உள்ளிட்ட மூவரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பொலிஸ் பிணையில் அவர்களை விடுவித்திருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இன்று ஞாயிற்றுக் கிழமை உதயன் பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது.

இந்நிலையில், அச்சுவேலியில் இருந்து தமது சபைக்குச் சொந்தமான சொகுசுப் பேருந்து மற்றும் பட்டா வாகனம் என்பவற்றில் உதயன் பத்திரிகை அலுவலகத்துக்கு வந்து, பத்திரிகை அலுவலக வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்து அடவாடியில் ஈடுபட்டதுடன் , நிறுவனத்தில் வேலை செய்தவர்களையும் அனுமதியின்றித் தமது கையடக்க தொலைபேசிகளில் வீடியோ , புகைப்படங்கள் எடுத்தும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

அது தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு உதயன் நிறுவனத்தினர் அறிவித்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தர முன்னர் அக்கும்பல் தமது சொகுசுப் பேருந்திலும், பட்டா வாகனத்திலும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில், உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!