இலங்கையின் 75வது சுதந்திர தினத்தன்று பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட “இலங்கையின் சுதந்திர நாள் – தமிழர்களுக்குக் கரிநாள்” எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமைக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் தவத்திரு வேலன் சுவாமி ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணப் பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணை இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இடம் பெற்றது.
வழக்கை விசாரணை செய்த நீதிபதி எதிராளிகளை பிணையில் செல்ல அனுமதித்ததோடு மே மாதம் எட்டாம் திகதி வரை வழக்கை ஒத்தி வைத்தார். எதிராளிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எஸ். தவராஜா மூத்த சட்டத்தரணி எஸ். ஸ்ரீகாந்தா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.