யாழ் நெல்லியடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தூதாவளை வீதி, கரணவாய் பகுதியில் இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞன் தூதாவளை, கரணவாய், கரவெட்டியைச் சேர்ந்த 29 வயதுடைய அராஜகுலேந்திரன் பிருந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று 19 ஆம் திகதி அதிகாலை 12:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, தூதாவளை வீதியில் வழிமறிக்கப்பட்ட அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வெளியே சென்ற மகனைக் காணவில்லையென அவரது தாயும், தந்தையும் தேடிச் சென்ற வேளையில், வீதியில் அவர் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளார்.
பெற்றோர்களால் உடனடியாகப் பருத்தித்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சடலம் பருத்தித்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
