யாழ்ப்பாணம்- பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள தனியார் காணிகளை அவற்றின் அசல் உரிமையாளர்களிடம் மீண்டும் கையளிக்கும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், அது தொடர்பான சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும், பாதுகாப்பு பிரதானிகளின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல் நேற்று 28ஆம் திகதி நடைபெற்றது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓய்வுபெற்ற பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் கொழும்பில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓய்வுபெற்ற பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யாகொந்த உட்பட சிரேஷ்ட பாதுகாப்பு மற்றும் நிர்வாக அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
காணிகளை மீளக் கையளிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள செயற்பாட்டு மற்றும் நிர்வாகத் தடைகளைத் தீர்ப்பதில் இந்தக் கலந்துரையாடலின் பிரதான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இன்னும் இராணுவத்தின் வசம் உள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதை துரிதப்படுத்துவதற்காக, அந்த இராணுவப் பிரிவுகளை கட்டம் கட்டமாக அகற்றுவது குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.
இதன்படி, சிவில் சொத்துக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையிலும், அத்தியாவசிய பாதுகாப்புப் பிரிவுகளைத் தொடர்ந்து பேணி, பிரதேசத்தின் தொடர்ச்சியான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், புதிய எல்லைகளை நிறுவுவதை நிறைவு செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்தச் செயல்முறை வெளிப்படையானதாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும் என்றும், தேசிய பாதுகாப்புடன் முழுமையாகப் பொருந்திப் போக வேண்டும் என்றும் எனவும் இக்கலந்துரையாடலில் வலியுறுத்தபட்டது.
