பகிடிவதைக்கு மன்னிப்பே கிடையாது – பிரதமர் ஹரிணி தெரிவிப்பு!

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் மாணவர் அரசியலுக்கு எந்த வகையிலும் தடை ஏற்படுத்தப்பட மாட்டாது, ஆனால் வன்முறை மற்றும் பகிடிவதைக்கு எந்த வகையிலும் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நூலகக் கட்டடத்தைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய நூலகத்தைத் திறந்து வைத்த பிரதமர், புதிய நூலக வளாகத்தையும் பார்வையிட்டதுடன், பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இதன் போது அங்கு உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கல்வித் துறையில் அளவுசார்ந்த வளர்ச்சியை ஏற்படுத்துவதை விட, உலகை எதிர்கொள்ளக்கூடிய மாணவர்களை உருவாக்கும் தரமான கல்வியை வழங்கும் இடங்களாக பல்கலைக்கழகங்களை நிறுவுவதே அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும்.

வெறுமனே இளமானி பட்டதாரிகளை உருவாக்கும் பணிக்கு அப்பால், நாட்டிற்கும் உலகிற்கும் பயனுள்ளதாகவும் உற்பத்தித் திறன் கொண்டதாகவும் இருக்கும் பட்டப்பின்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் நடத்தப்படும் இடங்களாக பல்கலைக்கழகங்களை மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பமாகும்.

எமது பல்கலைக்கழக முறைமை அண்மைக் காலமாக விரிவடைந்துள்ளது, ஆனால் அதன் தரத்தில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை. எமது பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்கள் உலகை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

எதிர்வரும் சில ஆண்டுகளில், பல்கலைக்கழகக் கல்வியின் தரம் சர்வதேச மட்டத்தில் இருப்பதை உறுதிசெய்து, பல்கலைக்கழகங்களை பட்டப்பின்படிப்பு, ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகங்களாகவும், ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் மையங்களாகவும் மாற்றுவது அவசியம்.

பல்கலைக்கழகங்கள் தாங்கள் உருவாக்கும் பட்டதாரிகள் விடயத்தில் திருப்தி அடைய முடியாது என்பதை இந்த அவையில் உள்ள பலர் ஒப்புக்கொள்வார்கள்.

பல்கலைக்கழகத்தில் சேரும் புதிய மாணவர்களுக்கு இருக்க வேண்டிய தரம் மற்றும் அடிப்படை திறன்கள் இல்லை. பாடசாலைக் கல்வி மூலம் செய்ய வேண்டிய பணிகள் முறையாகச் செய்யப்படாததால், பாடசாலையில் கற்றுக்கொள்ள வேண்டியவற்றைப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்க வேண்டியுள்ளது.

இந்த நிலைமை இந்த நாட்டின் உயர்கல்வி முறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பிள்ளை பாடசாலையை விட்டு வெளியேறும்போது, அவர்கள் தொழில் உலகிற்கு அல்லது உயர்கல்விக்கு தயாராக இருப்பதை உறுதி செய்ய நாம் மறந்துவிடக் கூடாது.

புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் அந்த நிலையை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், ஒரு பல்கலைக்கழக மாணவர் சமூகமாக, அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கும், போராட்டம் நடத்துவதற்கும், மாணவர் அரசியலை மேற்கொள்வதற்கும் நாங்கள் எந்தத் தடையையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் பல்கலைக்கழகங்களில் எந்தவிதமான வன்முறை, பகிடிவதை அல்லது அமைதியான மாணவர் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் எதற்கும் நாங்கள் இடமளிக்கப் போவதில்லை. இதுபோன்ற விடயங்களை மன்னிக்க நாங்கள் தயாராக இல்லை.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்குத் தேவையான வசதிகளை வழங்க வேண்டும் என்ற கொள்கை முடிவில் அரசாங்கம் இருப்பதாகவும், அந்த நோக்கத்திற்காக அது செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதிஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

வவுனியா பல்கலைக்கழகத்தின் வேந்தர், துணைவேந்தர், விரிவிரையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் உட்படப் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!