தையிட்டி விகாரையை அகற்றக்கோரும் போராட்டத்துக்கு சிறீதரன் எம். பியும் ஆதரவு!

வலி. வடக்கு – தையிட்டிப் பகுதியில் விகாரையினால் ஆக்கிரமிக்கப்பட்டுத் தமது காணிகளை இழந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள், தமக்கு இழப்பீடு வேண்டாம் காணிகளைத் திரும்பத் தாருங்கள் என்று கேட்டு நடத்தவுள்ள போராட்டத்துக்குத் தான் ஆதரவு வழங்கவுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தையிட்டி விகாரை விவகாரம் இன்று தமிழ் மக்களின் இருப்புக்குச் சவாலாக மாறியுள்ளது. மக்களின் காணி அவர்களுக்கே உரியது. ஆனால், இன்று அது மறுக்கப்படுவதாகத் தெரிகின்றது.

நீண்ட காலமாக இரணுவத்தினரது பிடிக்குள் இருந்த எமது மக்களின் காணிகளில் அவர்களுக்குத் தெரியாமலேயே இந்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அரசினதும், பௌத்த கட்டமைப்பினதும் இந்த அதிகார இறுமாப்பு எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதொன்றல்ல. அதனால் குறித்த காணி நிலங்களின் உரிமையாளர்கள் தமக்கான நியாயம் கேட்டு நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். ஆனாலும் அது இதுவரை நிறைவேறாத நிலையில் அண்மையில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பல முரணான கருத்துக்கள் கூறப்பட்டு திசைதிருப்பும் முயற்சியொன்று உருவாக்கப்பட்ட நிலையில் அதற்குக் கடும் எதிர்ப்பும் காட்டப்பட்டது.

அதேநேரம் இலங்கையின் வேறு சில பகுதிகளில் இந்துக் கோயில்கள் சில இன முரண்பாட்டை உருவாக்கும் என்ற தோரணையில் இடிக்கப்பட்டும் இருக்கின்றன. அதனால் நாட்டில் வாழும் அனைத்துத் தரப்பினருக்கும் ஒரே சட்டம் என்று கூறும் இந்த அரசு இந்த விகாரையையும் இன முரண்பாட்டை உருவாக்கும் ஒன்றாகக் கருதி இடிப்பது அவசியம்.

அத்தோடு விகாரையின் சுற்றுப்புறத்திலுள்ள வேறு சில மக்களின் காணி நிலங்களும் சட்ட விரோதமாகப் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்தப் பகுதி மக்கள் பெப்ரவரி 12இல் பெரும் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப் பல்சார் தரப்பினரிடமும் ஆதரவைக் கோரியுள்ளனர். மக்களின் உணர்வுகளுக்கு வலுச்சேர்க்க குறித்த போராட்டத்துக்கு நாம் எமது ஆதரவை வழங்கவுள்ளோம்” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!