பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் – இனுவில் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரை எதிர்வரும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புகைப்படங்களை முகப்புத்தகத்தில் பதிவேற்றினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்ட அளவோடை வீதி, இனுவில் மேற்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய மனோகரன் கஜந்தரூபன் என்பவரையே எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மனோகரன் கஜந்தரூபன் இன்று காலை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரின் சமர்ப்பணத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட நபரை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.