யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பதவியேற்றுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்றுஇ புதன்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெற்ற விசேட நிகழ்வில் பதில் மாவட்ட செயலாளர்
ம.பிரதீபனிடம் இருந்து கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், வடமாகாண விவசாய அமைச்சு அலுவலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை அமைச்சரவை நேற்று முன்தினம், திங்கட்கிழமை வழங்கியது. இதனையடுத்து புதிய அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து தமக்கான நியமன கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.
இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி, 2013 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலக செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளராக, மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராக கடமையாற்றி நிறைவாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.
