யாழ்ப்பாணம் – கைதடிப் பகுதியில் ஆலய பூசகரை கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும், அவரிடமிருந்து ஒருதொகை பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கைதடி ஏ9 வீதியில் அமைந்துள்ள கௌரி அம்மன் ஆலயத்திலேயே இந்த கொள்ளை சம்பவம் இன்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது.
பூசகரின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் விரைந்து சென்ற போது இரண்டு கொள்ளையர்கள் பூசகர் அணிந்திருந்த 2 பவுண் தங்கச் சங்கிலியையும், ரூபா 45 ஆயிரம் பணத்தையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளையருக்கு உதவினார் என்ற சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கைதான சந்தேக நபரை நாளை சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ள சாவகச்சேரி பொலிஸார், தப்பிச் சென்ற இரு கொள்ளையர்களையும் கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

