உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தைப் பிற்போடத் தீர்மனம்!

உத்தேசிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை ஒத்திவைக்கத் தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைக் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைபு கடந்த மார்ச் 22 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானியில் வெளியானது. நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழித்து, அதற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, தாம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் போதிய ஆலோசனைகள் இன்றி வர்த்தமானியில் இந்த சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று அறிவித்திருந்ததுடன், அதனை மீளாய்வு செய்வதற்கும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழுவொன்றையும் நியமித்துள்ளது.

இந்த நிலையில், பரந்த அளவிலான பங்குதாரர்களின் ஆலோசனை மற்றும் சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பங்குதாரர்களின் கருத்துக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் வரை சட்டமூலத்தை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!