யாழ்ப்பாணத்தில் பிரதம தபாலகத்துக்கு முன்பாக – காங்கேசன்துறை வீதி ஆரம்பமாகும், முற்றவெளி சுற்று வட்டத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை இன்று வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.
யாழ். மாநகரை அழகுபடுத்துமுகமாக “ரில்கோ சிற்றி ஹொட்டல்” நிறுவனத்தினரின் நிதி அனுசரணையில் அமைக்கப்பட்ட இந்தச் சுற்று வட்டத்தின் திருவள்ளுவர் சிலையை செஞ்சொற் செல்வர் கலாநிதி.ஆறுதிருமுருகன் திரைநீக்கம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில், நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், ரில்கோ சிற்றி ஹொட்டல் உரிமையாளர் தி.திலகராஜ், யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, சிவசேனையின் தலைவர் மறவன்புலவு கே. சச்சிதானந்தன், யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் , யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர்களான இ.ஆனோலட், வி.மணிவண்ணன், யாழ். மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், வட மாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாண மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர், மாநகர சபை உறுப்பினர்கள், ரில்கோ சிற்றி ஹொட்டல் ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




