அரசாங்கத்தின் ஆட்சி சர்வாதிகார ஆட்சி எனக் கண்டித்துத் தீப்பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் – புத்தூரில் வலி. கிழக்கு பிரதேச சபைக்கு முன்பாக இன்று முன்னிரவு இந்தப் போராட்டம் நடாத்தப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் தீப்பந்தங்களைத் தாங்கியவாறு, 200% மின்சார கட்டண உயர்வைக் கைவிடு, உணவு எரிபொருள் விலையைக் குறை, உழைக்கும் மக்களைப் பட்டினிக்குத் தள்ளாதே, அடக்கு முறைகளை ஏவி மக்களை ஒடுக்காதே உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியும் பதாகைகளைத் தாங்கியவாறும் தீப்பந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் புதிய ஜனநாயக மார்க்சிச – லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.க செந்திவேல், வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், பிரதேச சபை உறுப்பினர் செல்வம் கதிர்காமநாதன் மற்றும் பொது மக்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.