இளம் குடும்பஸ்தர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

தற்கொலை செய்துகொள்வதாக மனைவியை மிரட்டுவதற்காக கழுத்தில் மாட்டப்பட்டிருந்த சுருக்கு இறுக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று 15 ஆம் திகதி அதிகாலை உயிரிழந்துள்ளார்.

உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளம் குடும்பஸ்தரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த எட்டாம் திகதி இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த சுரேந்தன், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் முரண்பட்டதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.

பின்னர் அவர் ஒரு கதிரையில் அமர்ந்துகொண்டு, கழுத்தில் சுருக்கிட்டவாறு தான் தற்கொலை செய்யப்போவதாக மனைவியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

கைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போதே மதுபோதையில் அவர் உறங்கிவிட்டார்.

பின்னர் அவரது சகோதரன் அங்கு சென்று பார்த்தபோது, அவர் கழுத்தில் சுருக்குடன் குறட்டைவிட்டு உறங்கிக்கொண்டிருந்தார்.

உடனடியாக சகோதரன் அவரது கழுத்தில் இருந்த கயிற்றை அகற்றிவிட்டு, அவரைத் தரையில் படுக்க வைத்துள்ளார்.

இந்நிலையில் சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!