முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 40 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள அமரர் தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில் இடம்பெற்றது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் தலைவர்களில் ஒருவரும், உடுவில் – மானிப்பாய் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனின் தந்தையாருமான அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கம் 1985 ஆம் ஆண்டு இதே நாளில் யாழ். தாவடிப் பகுதியில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரது 40 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று யாழ் தாவடியில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் சிறப்பாக நடைபெற்றது
அன்னாரின் புதல்வரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சிர்த்தார்த்தன் சுடரேற்றி மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியதோடு நிகழ்வில் கலந்துகொண்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்
இந் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமரர் தர்மலிங்கத்தின் புதல்வருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன், யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பா.தனபாலன்,வவுனியா மாநகர சபை முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.நிரோஸ் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
1918 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – கந்தரோடையில் பிறந்த விஸ்வநாதர் சரஸ்வதி தம்பதிகளுக்கு மகனாக பிறந்த அமரர் தர்மலிங்கம் சிறு வயது முதல் சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்து அதன் பயனாக முதன் முதலில் உடுவில் கிராம சபையின் தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். இப் பதவியில் ஐந்துக்கு மேற்பட்ட தடவைகள் தொடர்ச்சியாக இருந்தார் அதனைத் தொடர்ந்து சுன்னாகம் பட்டின சபையின் தலைவராகவும் பதவி வகித்தார்.
1960 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் முதன் முதலாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதல் தடவையிலேயே நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார். அன்றிலிருந்து 1983 ஆம் ஆண்டு வரை வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்ததுடன், தான் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெறுகின்ற அளவுக்கு மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்றிருந்தார் விஸ்வநாதர் தர்மலிங்கம். இவர் ஐந்து தடவைகள் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.






