அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவர், வைத்தியர் விடுதியினுள் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொர்புடைய சந்தேக நபர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரைக் கண்டுபிடித்துக் கைது செய்வதற்காக ஐந்து விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை இரவு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் வைத்துப் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துக்கு விரைவான நீதி கோரி வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள் உட்பட பணியாளர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில், பொது வைத்தியசாலைகளிளில் பெண் வைத்தியர்களின் பாதுகாப்பு குறித்துக் கேள்வி எழுப்பியதுடன், தனது வன்மையான கண்டணங்களையும் பதிவு செய்தார். அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க கடுமையான சட்டங்களை அமுலாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
