உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் சிறப்பு ஏற்பாடு சட்டமூலத்துக்கு எதிரான மனுவை எதிர்வரும் 24 விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் சிறப்பு ஏற்பாடு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 24ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று நீதியரசர்களான யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது. மனுவின் சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக எதிர்வரும் 24 ஆம் திகதி அழைக்குமாறு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காகக் கோரப்பட்ட வேட்பு மனுக்களை ரத்து செய்யும் நோக்கத்துடன் கடந்த அரசாங்கம் இந்த சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்மொழியப்பட்ட சட்டமூலத்தில் உள்ள சில விதிகள், மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதிக்கின்றது என்றும் இது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என்றும் மனுதாரர் கூறியுள்ளார்.

அதன்படி, குறித்த சட்டமூலத்தில் உள்ள சர்ச்சைக்குரிய சரத்துக்கள் நிறைவேற்றப்பட வேண்டுமானால், அவை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!