பொதுமக்கள் அரச சேவைகளை இலகுவாக அணுக உதவும் வகையில் ‘சுப்பர் அப்’ என்ற செயலியொன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வெவ்வேறு அரசத் திணைக்களங்களில் வெவ்வேறு அமைப்புகள், பல அங்கீகார செயல்முறைகள் மற்றும் மீண்டும் மீண்டும் தரவு உள்ளீடு தேவைப்படும் அரச சேவைகளை வழங்குவதற்கான தற்போதைய வேறுபட்ட அணுகுமுறைகள் பொதுமக்களுக்கு குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இது ஆண்டுதோறும் ரூ. 500 மில்லியனுக்கும் அதிகமான பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இலங்கையின் டிஜிறறல் பொருளாதாரத் திட்டத்துக்கு இணங்க, ஒரே கணினிப் பயன்பாட்டின் மூலம் மக்களுக்குப் பரந்தளவிலான அரச சேவைகளை உள்ளடக்கிய ‘சுப்பர் அப்’செயலியை உருவாக்குவது ஒரு மூலோபாய முன்னுரிமையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம், இலங்கையின் 18 வயதுக்கு மேற்பட்ட 14 மில்லியன் மக்களும், ஆண்டுக்கு 2 மில்லியன் பார்வையாளர்களும் ஒரே இடைமுகத்தின் மூலம் அரச சேவைகளை தடையின்றி அணுக உதவும் ஒரு டிஜிற்றல் தளத்தை உருவாக்கும். இது அனைத்து அரச சேவைகளையும் ஒரே பயனர் நட்பு கைபேசி செயலி மற்றும் வலை பயன்பாட்டில் ஒருங்கிணைக்கும்.
அதன்படி, 2025-2026 காலகட்டத்தில் மொத்தம் ரூ. 500 மில்லியன் செலவில் ‘சுப்பர் அப்’ செயலித் திட்டத்தை இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்த டிஜிற்றல் பொருளாதார அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
