அரிசி ஆலை உரிமையாளர்கள் சலுகை வட்டி விகிதத்தில் கடன்

நெற்பயிர் செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், 2025/26 பெரும்போக நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்காக, சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, இந்த கடன் திட்டத்தின் இலக்கு குழுக்கள், சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் அதிகபட்சமாக 25 மெட்ரிக் டொன் தினசரி நெல் திறன் கொண்ட கூட்டுறவு சங்கங்கள் ஆகும்.

அனைத்து கடன் விண்ணப்பதாரர்களும் தொடர்புடைய அரசு நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட செல்லுபடியாகும் வணிக பதிவு சான்றிதழ் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையால் வழங்கப்பட்ட உரிமத்தை வைத்திருக்க வேண்டும்.

இந்த கடன் திட்டத்தின் கீழ், அவர்கள் 7% வருடாந்திர வட்டி விகிதத்தில் ரூ. 50 மில்லியன் வரை கடனைப் பெற முடிவதுடன், குறித்த கடன் தொகையை 180 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, ஹட்டன் நேஷனல் வங்கி, செலான் வங்கி, சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி, டி.எஃப்.சி.சி வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி,சனச அபிவிருத்தி வங்கி, அமானா வங்கி, கார்கில்ஸ் வங்கி,பேன் ஏசியா வங்கி மற்றும் அரச ஈட்டு முதலீட்டு வங்கிகள்  ஊடாகக் கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தக் கடன் திட்டத்தின் ஊடாக மொத்தம் 10,000 மில்லியன் ரூபாய் நிதியை விடுவிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயத் திணைக்களம் அறிவிக்கும் குறைந்தபட்ச விலையின் கீழ் நெல்லைக் கொள்வனவு செய்வதன் மூலம் விவசாயிகளுக்குச் சிறந்த வருமானத்தை உறுதிப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!