அரச ஊழியர்களுக்கு நாளை 25ஆம் திகதி புதன்கிழமைக்குள் சம்பளத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள சகல அரசாங்க ஊழியர்களுக்கும் சம்பளத்தை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசின் நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அல்லாத அனைத்து ஊழியர்களுக்குமான சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, அரசாங்கத்தின் செலவினங்களை முகாமைத்துவம் செய்வதற்காக அரசாங்கத்தின் பதவி நிலை கொண்ட அதிகாரிகளின் சம்பளத்தை தாமதித்து வழங்குவதற்கு அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது.
அரச நிறைவேற்று அல்லாத உத்தியோகத்தர்களின் சம்பளத்தை குறிக்கப்பட்ட தினத்தில் வழங்குவதற்கும், பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கு சில தினங்கள் தாமதித்து சம்பளத்தை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் தெரிவித்திருந்தார்.