தங்காலையில் மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 9,888 மில்லியன்!

தங்காலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 9,888 மில்லியன் ரூபாய் என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

தங்காலையில் மூன்று லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 705.91 கிலோ கிராம் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் 284.94 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 420.976 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருட்கள் உள்ளடங்கியிருந்தது.

இந்நிலையில், குறித்த 3 லொறிகளினதும் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகப் பொலிஸ் ஊடக பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை – தங்காலைப் பகுதியில் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்கள் இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுக்கும் ஒருவருக்கு சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ‘உனாகுருவே சாந்த’ என்பவரின் ஊடாக இந்த போதைப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

தங்காலை, சீனிமோதர பகுதியில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் ஒரு வீட்டில் இரண்டு ஆண்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டமையை அடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இந்த 3 லொறிகளில் இருந்து நேற்று போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!