சொந்தப் பாடசாலைப் பிள்ளைகளுக்குத் தனியார் வகுப்புகளில் கற்பிக்கத் தடை!

மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள், தாங்கள் கற்பிக்கும் சொந்தப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கட்டணத்துடன் தனிப்பட்ட வகுப்புகளை நடத்துவதற்கு தடைவிதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தடை பாடசாலை நேரம், பாடசாலைக்குப் பிறகு, வார இறுதி நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களுக்கும் வலுவுடையதாகும் என மேல்மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே.ஏ.டி.ஆர். நிஷாந்தி ஜயசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றறிக்கை மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மற்றும் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளினது அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்துமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, இதனை மீறி தனியார் வகுப்புகளில் தமது பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் சப்ரகமுவ மாகாணத்தில் முதன்முதலாக நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் பின்னர் மத்திய மாகாணத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மேல்மாகாணத்திலும் அமலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!