இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே எலின் ஸரெனர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து சமகால விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு கடந்த 20 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
வறுமை ஒழிப்பு, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள், வரி சீர்திருத்தங்கள், மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்திமற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் கல்வி முறைமையை மறுசீரமைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், மிகவும் பயனுள்ள மற்றும் வினைத்திறனான அரச சேவைக்காக நிர்வாக முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஷோபினி குணசேகர மற்றும் நோர்வே தூதரக அதிகாரிகளும், இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என்று பிரதமர் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.