பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – நாடாளுமன்றத்தில் சபாநாயகர் விளக்கம்!

பாதுகாப்பு பிரதி அமைச்சரும், ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரலுமான அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒழுங்கற்றது என்றும் அதனைத் தற்போதைய வடிவத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் உட்பட 32 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒப்பமிடப்பட்ட இந்தப் பிரேரணை கடந்த தம் 12 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த ஓகஸ்ட் 19 ஆம் திகதி, அரசியலமைப்பு, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை மற்றும் நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப இந்த விடயத்தை கவனமாக ஆராய்வதாக சபாநாயகர் அறிவித்தார். தமது முடிவை அறிவிக்கும்போது அரசியலமைப்பின் 42, 43 மற்றும் 44 வது பிரிவுகளை சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

“இவை கூட்டு மற்றும் தனிப்பட்ட பொறுப்பை அமைச்சரவை அமைச்சர்கள் மீது வைக்கிறது. ஒரு பிரதி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், அமைச்சரவை உறுப்பினர் அல்ல என்றும், அவர் நேரடி அரசியலமைப்புப் பொறுப்பை ஏற்கவில்லை” என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அரசாங்கம் , பிரதமர் அல்லது தனிப்பட்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு எதிராக மட்டுமே நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது என்றும் சபாநாயகர் வலியுறுத்தியதுடன், பிரதி அமைச்சர்களுக்கு அத்தகைய ஏற்பாடு எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

இலங்கை, பிரித்தானியா, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற பிற பொதுநலவாய ஜனநாயக நாடுகளிலும், அத்தகைய தீர்மானத்தை ஏற்றுக் கொள்வது அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற மரபுகளுக்கு முரணான “விரும்பத்தகாத முன்னுதாரணத்தை” உருவாக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதன் விளைவாக, பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை “தற்போதைய வடிவத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று சபாநாயகர் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!