இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ஜகத் விக்ரமரத்ன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது மருத்துவர் ஜகத் விக்ரமரத்னவை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்மொழிய, அவைத் தலைவரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க வழிமொழந்தார்.
புதிய சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மருத்துவர் ஜகத் விக்ரமரத்ன, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பொலன்நறுவ மாவட்டத்தில் போட்டுயிட்டு விருப்பு வாக்கு எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தைப் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்.
பேராதனைப் பல்கலைக்கழக மருத்து பீடத்திலிருந்து மருத்துவராக வெளியேறிய ஜகத் விக்ரமரத்ன, கொலம்பியப் பல்கலைக்கழகத்தில் சுகநல தர நிர்ணயம் மற்றும் நோயாளர் பாதுகாப்புத் தொடர்பான பட்டப்பின் டிப்ளோமாவையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ நிர்வாகத்தில் முதுவிஞ்ஞானமாணிப் பட்டத்தையும் பெற்றவராவார்.
10வது நாடாளுமன்றத்தின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக ரங்வல கடந்த 13ஆம் திகதி தனது பதவியை ராஜினாமாச் செய்ததையடுத்து புதிய சபாநாயகர் பதவிக்கான தெரிவு இன்று காலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
