அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தின் துணைத் தலைவி சாங் டோங்மேய், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து, பெண்கள் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பரஸ்பர முயற்சிகள் குறித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பு, நேற்று 16 ஆம் திகதி, திங்கட்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அனைத்து சீன பெண்கள் சம்மேளனத் துணைத் தலைவி சாங் டோங்மேய் தலைமையிலான தூதுக்குழுவினரை வரவேற்ற பிரதமர் கலாநிதி அமரசூரிய, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீடித்த நட்புறவு பற்றி விளக்கினார்.
பெண்களின் கல்வி , சுகாதாரம் மற்றும் பொருளாதாரப் பங்கேற்பு ஆகியவற்றில் பகிரப்பட்ட சவால்கள் மற்றும் வாய்ப்புகளை மையமாகக் கொண்டிருந்த இந்தச் சந்திப்பில், பெண்களின் தொழிற்படை ஈடுபாடு மற்றும் கீழ்மட்ட பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது உட்பட சீனாவின் முன்னேற்றங்கள் குறித்து அனைத்து சீன பெண்கள் சம்மேளனத் துணைத் தலைவி சாங் டோங்மேய் விளக்கினார்.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் உட்பட இலங்கை சீனத் தூதரகத்தின் உயர் அதிகாரிகளும், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளியுறவு அமைச்சின் கிழக்கு ஆசியாவுக்கான பணிப்பாளர் நாயகம் ருவந்தி தெல்பிட்டிய மற்றும் கிழக்கு ஆசியப் பிரிவின் பணிப்பாளர் உதானி குணவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.