பால்நிலை சமத்துவம், ஒப்புரவு குறித்த இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவம் பற்றிய இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு நேற்று புதன்கிழமை, பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.

“பால்நிலையை முதன்மைப்படுத்துவதற்கான பல்துறைசார்ந்த மற்றும் ஒன்றிணைந்த முன்னோக்குகள்” என்ற தொனிப் பொருளுடன் இடம்பெற்ற இந்த “வியோமம்” சர்வதேச ஆய்வு மாநாடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையப் பணிப்பாளரும், சந்தைப்படுத்தல் துறைத் தலைவருமான பேராசிரியர் எஸ்.சிவாணி தலைமையில், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி டிலோஜினி சங்கரதாஸ் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட பால்நிலை ஆலோசகரும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞானங்கள் பீடாதிபதியுமான கலாநிதி மனோஜ் பெர்ணாண்டோ, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோட்டா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள தர்மம் நிலையத்தின் பணிப்பாளரும், சட்டவாளருமான நகுலேஸ்வரன் தர்மலிங்கம் ஆகியோர் திறவு உரையாளர்களாகக் கலந்து கொண்டனர்.

மாநாட்டுக்கு முன்னதாக, பால்நிலை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கண்காட்சி ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சியில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பால்நிலை வன்முறை குறித்த 56 உண்மைச் சம்பவங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மிக முக்கிய அம்சமாக தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களின் நடன நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆய்வு மாநாட்டுத் திறவுரைகளைத் தொடர்ந்து, ஆய்வுக் கட்டுரைகள், அனுபவப் பகிர்வுகள் மற்றும் செய்தி மடல் வெளியீடும் இடம்பெற்றதுடன், வடக்கு மாகாணத்தில் பால்நிலை சமத்துவத்தை முதன்மைப்படுத்துவதற்காகத் தம்மை அர்ப்பணித்துச் சேவையாற்றியவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், பால்நிலை மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடும் சமூக மட்டப் பிரதிநிதிகள், பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், அரசாங்க அலுவலர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!