யாழ்ப்பாணத்தில் பரவி வரும் காய்ச்சல்; எலிக்காய்ச்சல் எனச் சந்தேகம் – பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு பிராந்தியப் பணிப்பாளர் கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் பரவி வரும் ஒருவகைக் காய்ச்சலின் காரணமாக இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், இந்தக் காய்ச்சல் எலிக் காய்ச்சலாக இருக்கலாமென்றும் பொதுமக்களை எச்சரித்துள்ள யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன், நோயின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு பின்வரும் விடயங்களை பின்பற்றுமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • காய்ச்சல் ஏற்பட்டால் ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலையை நாடவும். காய்ச்சல் ஏற்பட்டு தாமதமாக அரச வைத்தியசாலைகளுக்கு வருகை தந்தமையினாலேயே பெரும்பாலான இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
  • தகுந்த மருத்துவ ஆலோசனையின்றி நேரடியாக மருந்தகங்களில் மருந்துகள் வாங்கிப் பாவிப்பதை தவிர்த்துக்கொள்ளவும்.
  • தற்போதைய காலப்பகுதியில் அவசியமின்றி வெள்ள நீரில் இறங்குவதை தவிர்த்துக்கொள்ளவும்.
  • வயல்கள் சதுப்பு நிலங்கள், வடிகால்களில் வேலை செய்பவர்கள் கால்களுக்கு பாதுகாப்பு அங்கிகளை அணிந்துகொள்ள வேண்டும்.
  • கால்களில் காயங்கள் அல்லது புண்கள் உள்ளவர்கள் வெள்ள நீரில் இறங்குவதை தவிர்த்துக்கொள்ளவும்.
  • கட்டாயமாக கொதித்து ஆறிய நீரைப் பருகவும்.
  • வெள்ள நீரினால் அசுத்தமான கிணறுகளை இறைத்து குளோரின் இடவும்.
  • தற்போதைய காலப்பகுதியில் வெள்ள நீரால் நிரம்பியுள்ள குளங்களில் குளிப்பதை தவிர்த்துக்கொள்ளவும்.

யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்

” யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளநிலைமைக்கு பின்னர் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஒரு வகையான காய்ச்சல் பரவி வருகின்றது. இக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நான்கு இறப்புக்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இரண்டு இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன. இந்த இறப்புக்களில் இரண்டு பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் இரண்டு சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் ஒன்று கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் ஏற்பட்டுள்ளன. யாழ் போதனா வைத்தியசாலையில் இறந்த ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினராக காணப்படுகின்றனர். எல்லா இறப்புக்களும் சுவாசத்தொகுதி பாதிப்பினாலேயே ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த காய்ச்சலுடன் நவம்பர் மாதத்தில் பன்னிரெண்டு நோயாளர்களும் டிசம்பர் மாதத்தில் இருபத்தொரு நோயாளர்களுமாக மொத்தமாக இதுவரை முப்பத்து மூன்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இந்தக் காய்ச்சலுடன் இருபது நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இக் காய்ச்சலானது எலிக் காய்ச்சலாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. இக் காய்ச்சல் எந்த வகையானது என்பதை உறுதிப்படுத்துவதற்காக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கும்> கண்டி போதனா வைத்தியசாலைக்கும் குருதி மாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

எலிக்காய்ச்சலானது மழை வெள்ளத்தில் எலி, ஆடு, மாடு போன்ற விலங்குகளின் எச்சங்கள் கலப்பதன் மூலம் இந் நோய்க் கிருமிகள் வெள்ள நீரினில் கலக்கின்றன. பொதுமக்கள் இந்த வெள்ள நீருடன் தொடுகை ஏற்படும் போது அவர்களது தோலிலுள்ள சிறு காயங்கள், புண்கள் மூலம் உடலின் குருதிச் சுற்றோட்ட தொகுதியை சென்றடைந்து எலிக்காய்ச்சல் நோய் உண்டாகிறது. மேலும் இக்கிருமிகள் கலந்த அசுத்தமான நீரைப் பருகுவதனாலும் எலிக்காய்ச்சல் நோய் ஏற்படலாம்.

எனவே பொதுமக்கள் மேற்படி ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!