யாழ்.போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பின – மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தகவல்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனைத்து சேவைகளும் வழமை போல நடைபெறுவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வெள்ளப் பெருக்கு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சில விடுதி பகுதிகளில் நீர் புகுந்துள்ளது. மேலும், பல ஊழியர்களின் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அவர்கள் வேலைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமது வீட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் பொருட்படுத்தாமல் பல ஊழியர்கள் சேவையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.

தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால், சாதாரண வைத்திய சேவைகளை வழங்குவதில் சிக்கல்கள் இருக்கக்கூடும் என அறிவித்திருந்தோம். இருப்பினும் பெரும்பாலான ஊழியர்கள் மக்களுக்கான சேவைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடமைக்கு வந்துள்ளார்கள். ஆகையால் அனைத்து சேவைகளும் வழமை போல நடைபெறுகின்றன.

அனர்த்தம் காரணமாக விபத்துக்களால் பாதிக்கப்பட்ட அல்லது தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இனிமேல்தான் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் எதிர்காலத்தில் டெங்கு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் வைத்தியசாலைக்கு வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கின்றோம்.

ஆகையால் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!