சிறுமியை துஸ்பிரயோகம் செய்த பூசகருக்கு 12 ஆண்டு சிறை!

சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட  பூசகரை  எட்டு வருடங்களுக்கு பின்னர் குற்றவாளியாக இனங்கண்ட கிளிநொச்சி மேல் நீதிமன்றம், குற்றவாளிக்கு 12 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது

கிளிநொச்சி பளைப்   பகுதியில கடந்த 2016  ஆம் ஆண்டு ஜூலை  முதலாம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில்  தனக்கு உறவு முறையான பதினாறு வயதுக்கும் குறைந்த சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினார் என்றக் குற்றஞ்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேநபரான பூசகருக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணைகளின் பின்னர்  சட்டமா  அதிபர் திணைக்களத்தினால்  கிளிநொச்சி மேல் நீதிமன்றில வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு,  கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. எம் .ஏ சகாப்தீனால் வியாழக்கிழமை (18) வழங்கப்பட்டது.

எதிரியின் சார்பாக சட்டத்தரணி பி. அருச்சுனா,  சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில்   அரச  சட்டவாதி என். என். அர்ஜுனகுமார் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இவ்வழக்கின் எதிரி, சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர். தனது மனைவியின் பாதுகாப்புக்காக சிறுமியின் பெற்றோரின் சம்மதத்துடன் குறித்த சிறுமியை தனது வீட்டில் வைத்திருந்துள்ளனர். இதன்போதே பாலியல் துன்புறுத்தலுக்கு  உள்ளாக்கியிருக்கின்றார்.

வட மாகாணத்திலே பதினாறு வயதிற்கு குறைவான சிறுவர்கள்  பாலியல் ரீதியில் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டாலும் ஒரு சில சம்பவங்களுக்கு மாத்திரமே பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வாறு மேல் நீதிமன்றம் வரைக்கும் கொண்டுவரப்படுகின்றது. ஆகையால், மேற்படி விடயங்களை கவனத்தில் கொண்டு குற்றவாளிக்கு தகுந்த தீர்ப்பளிக்குமாறு அரச  சட்டவாதி என். என். அர்ஜுனகுமார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

மேற்படி விடயங்களை கவனத்தில் கொண்ட   நீதிபதி, குற்றவாளிக்கு 12 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதுடன் பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் நட்டஈடும் செலுத்துமாறும் தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!