வரலாற்றுத் திணிப்பு – பௌத்த மயமாக்கலுக்கு எதிராக அணி திரள அழைக்கிறது பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்!

சுழிபுரம் பறாளை முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தைச் சங்கமித்தை நாட்டிய மரம் எனக் குறிப்பிட்டு  வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி மீளப் பெறப்பட வேண்டும் என வலியுறுத்தி நாளை காலை நடாத்தப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

நாளை சனிக்கிழமை காலை 10.00 மணியளவில், சுழிபுரம் சந்திப் பகுதியில் இந்தப் போராட்டம் நடாத்தப்படவுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார், இது பற்றி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் வருமாறு:

“வரலாற்றைத் திரிபுபடுத்தும் சிங்கள அரசு இன்னும் ஒரு படி மேல் சென்று சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய வரலாற்றை மேலும் திரிபடைய செய்துள்ளது.

சங்கமித்தை இலங்கைக்கு வருகை தந்தது கி.மு 3ஆம் நூற்றாண்டு என வரலாற்று மூலாதாரங்களில் திரிபடைய கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலய தர்மகர்த்தாவினர் குறித்த ஆலயம் 1768 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்படும் பொழுது எதுவித அரச மர எச்சங்கள் குறித்தும் தமது முன்னையவர்களோ அல்லது ஆதாரங்களோ குறிப்பிடவில்லை எனவும் தற்பொழுது ஆலயத்தில் உள்ள மரம் மிக குறைந்தளவான காலப்பகுதிக்குரியது எனவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த ஆலயத்தினரிடம் ஆகக் குறைந்தது  கலந்துரையாடலைக் கூடச் செய்யாது  எதேச்சதிகாரமான முறையில் இந்த  சிங்கள அரசு திட்டமிட்ட பெளத்தமயமாக்கல் செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளது.

ஆகவே தொடர்ச்சியாக சிங்கள  அரசின் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் இதனை வலியுறுத்தி நாளைய தினம் சனிக்கிழமை காலை 10 மணியளவில் சுழிபுரம் சந்தி பகுதியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கபடவுள்ளது. இதனை வலுச்சேர்க்கும் முகமாகப் பொது மக்கள், சமூக மட்ட அமைப்புக்கள், தமிழ் தேசியத்தின்பால் செயற்படும் இளைஞர்கள், யுவதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக் கட்சிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்” என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!