வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டுள்ளது. 40 வருடங்களுக்கு பின்னர் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு இம்முறை யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி வீதியில் உள்ள சண்முகநாதன் கபிலனின் வீட்டிலிருந்து திருநெல்வேலி வெள்ளைப் பிள்ளையார் ஆலயத்துக்குக் கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டு, அங்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு கொடிச்சீலை வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது.
திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை மே 24ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. குறிப்பிடத்தக்கதாகும். 1982ம் ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்தே திருக்கேதீஸ்வரத்துக்குக் கொடிச்சீலை வழங்கப்படுவது மரபாகும். கடந்த 40 வருடங்களாக யுத்தம் காரணமாக அந்த மரபு கைவிடப்பட்டிருந்தது. இம்முறை யாழ்ப்பாணத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.