உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூல சமர்ப்பணத்தை எதிர்த்து வடக்கு – கிழக்கில் மாபெரும் கதவடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு!

பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகவும் ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு முழுவதும் கதவடைப்புப் போராட்டமொன்றை நடத்தத் தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டிலுள்ள, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் இன்று திங்கட்கிழமை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியினர், தமிழ் தேசிய கட்சியினர் உட்படத் தமிழ்த் தேசியம் பேசும் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. இதனால், அன்றைய தினத்தில் வடக்கு கிழக்கு தழுவிய கதவடைப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!