அறிவிக்கப்பட்டு ஒத்திப்போடப்பட்டுக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக நியமனப் பத்திரம் தாக்கல் செய்து, அதன் காரணமாகச் சம்பளமற்ற விடுப்பு வழங்கப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சரால் நேற்று 03 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தின் படி மார்ச் மாதம் 09 ஆம் திகதி முதல் ஏப்ரல் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு அடிப்படைச் சம்பளத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தத் தகவலை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் வக்கம்புர இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், நியமனப் பத்திரம் தாக்கல் செய்தவர்களில் சிலர் கடமைக்குச் செல்வதாகத் தமக்குச் செய்தி கிடைத்துள்ளதாகவும் அது சட்டத்துக்குப் புறம்பான வேலை என்பதால் அவர்கள் வேலையிழக்கக் கூடும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
“அடிப்படை சம்பளம் வழங்க தேர்தல் ஆணைக்குழு பரிந்துரை செய்தது. அதனால்தான் இந்த அமைச்சரவை பத்திரம் போடப்பட்டது” என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.