யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை வடமாகாண ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் இடைக்கால தடைக் கட்டளை வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்ட போதே நீதிமன்றம் இடைக்கால தடைக் கட்டளை வழங்கியுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் யாழ் மாநகர சபையினை நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து வெளியேறப் பணித்ததுடன் அதனைப் புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் கையளிக்குமாறு யாழ். மாநகர சபையின் ஆணையாளரைப் பணித்திருந்தார். இதற்கு எதிராக யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபன் தாக்கல் செய்த வழக்கில் யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் ஆஜராகியிருந்தார்.
இந்த வழக்கை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி இடைக்காலக் கட்டளையை வழங்கியதுடன்,வழக்கை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.