வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்தும், அதற்கு நீதி கோரியும் வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றது.
ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா கந்தசாமி ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபட்ட பின் ஆரம்பமாகிய இந்தப் பேரணி மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து, அங்கிருந்து பசார் வீதி ஊடாக ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து, வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி ஊடாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.
வவுனியா – நெடுங்கேணி, வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் உட்பட அனைத்து விக்கிரகங்களும் கடந்த வாரம் உடைத்து அழிக்கப்பட்டிருந்தமை தமிழ் மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியிருந்தது.
இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், இந்த விசமச் செயலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியே இன்றைய பேரணி இடம்பெற்றது.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் “வெடுக்குநாறி மலை மீதான தாக்குதல் கௌதம புத்தரின் ஆன்மீகத் தோல்வி”, “ஈழத் தமிழனை வேரறுக்க நினைக்காதே”, “வெடுக்குநாறி எங்களின் இடம்”, “மத சுதந்திரத்தைத் தடுக்காதே”, “தொல்பொருள் திணைக்களமே வெளியேறு” போன்ற கோசங்களை எழுப்பியதுடன், பதாதைளையும் ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டப் பேரணியாகச் சென்ற மக்கள் வைத்தியசாலை சுற்றுவட்டப் பகுதியில் அமைந்திருந்த தொல்பொருள் திணைக்கள அலுவலக வளாகத்துக்குள் சென்று வாயிலை மறித்து தொல்பொருள் திணைக்களமே வெளியேறு என கோசமிட்டனர். சுமார் 15 நிமிடங்கள் வரை வாயிலை முற்றுகையிட்ட மக்கள் பின்னர் அங்கிருந்து வெளியேறி மாவட்ட செயலகத்துக்குச் சென்றனர்.
மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திரவிடமும், ஜனாதிபதிக்கான மகஜரை ஜனாதிபதியின் வடக்குக்கான இணைப்பாளரும், மேலதிக செயலாளருமான ஈ.இளங்கோவனிடமும் கையளித்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகஜர்கள் வழங்கப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிறிதரன், செ.கஜேந்திரன், இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சமயப் பெரியோர்கள், சமூக ஆர்வலர்கள், பல்கலைகழக மாணவர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், காணாமல் போன உறவுகளின் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.