பண்டாரவளை – பூனாகலை, கபரகல தோட்டத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
பண்டாரவளை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் அடை மழை பெய்துள்ளது. மழை காரணமாக கபரகலை தோட்ட வைத்தியசாலை அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் அமைந்துள்ள இரண்டு லயன் குடியிருப்பு தொகுதிகளில் 30 முதல் 40 வரையான வீடுகள் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட கிளை தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் இரண்டு பேர் கொஸ்லந்த வைத்தியசாலையிலும், மற்றைய இருவர் தியத்தலாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள 62 குடும்பங்களைச் சேர்ந்த 220 இற்கும் மேற்பட்டோர் பூனாகலை தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.