தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கான பாடசாலைகளைத் தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளிகள் நாளை மறுதினம், 22 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி 153 புள்ளிகளுக்கு மேல் பெற்ற பிள்ளைகளுக்கு தரம் 6 க்கான பாடசாலை வெட்டுப் புள்ளிகள் வழங்கப்படும் எனக் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் லலித எகொடவெல தெரிவித்துள்ளார்.
153 புள்ளிகள் மற்றும் அதற்கு மேல் பெற்ற 48 ஆயிரத்து 257 மாணவர்களுக்கு தேசிய பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைக்கும். ஒரு மாணவன் அல்லது மாணவி தனக்கு விருப்பமான 10 பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் கணினி தரவு அமைப்பில் உள்ளிடப்பட்டு, பாடசாலைத் தெரிவுக்கான வெட்டுப் புள்ளித் தரவைச் சரி பார்த்த பிறகு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் 18 ஆம் திகதி புலமைப் பரிசில் பரீட்சை நடத்தப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்தப் பரீட்சைக்கு 3 இலட்சத்து 29 ஆயிரத்து 668 பேர் தோற்றியிருந்தனர்.