கூட்டமைப்புத் தான் கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரசுக்குக் கொடுத்தது – கஜதீபன் ஒப்புதல் வாக்கு மூலம் : மக்களிடம் மன்னிப்பும் கோரினார்!

கிழக்கு முதலமைச்சர் பதவியை தாரை வார்த்துக் கொடுத்தமைக்காக மக்களிடம் நாம் பகிரங்க மன்னிப்பு கோருகிறோம் என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் ஜனநாயகப் பண்புகள் நீடிப்பதற்குத் தடையாக இருந்த தமிழ் அரசு கட்சி தானாகவே கூட்டமைப்பை விட்டு வெளியேறியதனால், கூட்டமைப்புக்குள் கூட்டாக முடிவெடுக்கும் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.

குத்து விளக்கு சின்னத்தில் – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சியினர் வெளியேறிய பின்னரும், நாங்கள்தான் கூட்டமைப்பு, தேர்தலின் பின்னர் இணைந்து செயற்படுவோம் என கூறிக்கொண்டிருந்தது ஏன் என்பது இப்பொழுது அனைவருக்கும் புரிந்திருக்கும். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணையப் போவதைத்தான் அவர்கள் அப்படிக் கூறினார்கள்.

கடந்த முறை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த போதும், 7 ஆசனங்களை கைப்பற்றிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியைத் தாரை வார்த்துக் கொடுத்தார்கள்.

இதை நாங்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். அது வெட்கப்பட வேண்டிய விடயம். எல்லோரும் ஒரே அணியாகவே அப்போது செயற்பட்டோம். தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் ஒற்றுமையைக் குலைக்கக்கூடாது என்பதற்காக, எமது எதிர்ப்பைக் கட்சிக்குள் இயன்றவரை பிரயோகித்தோம். அந்த நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவுகள் எப்படி எடுக்கப்பட்டன என்பது உங்களுக்குத் தெரியும். எங்கள் கருத்தை அப்போது அவர்கள் யாரும் செவிமடுக்கக்கூடத் தயாராக இல்லை.

கிழக்கு முதலமைச்சர் பதவியைத் தாரை வார்த்துக் கொடுத்தமைக்காக மக்களிடம் நாம் பகிரங்க மன்னிப்பு கோருகிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஜனநாயகப் பண்புகள் நீடிப்பதற்குத் தடையாக இருந்த தமிழ் அரசுக் கட்சி தானாகவே கூட்டமைப்பை விட்டு வெளியேறிச் சென்று விட்டது. இப்பொழுது கூட்டமைப்புக்குள் கூட்டாக முடிவெடுக்கும் ஜனநாயக அம்சம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு இனிமேல் அப்படியான தவறுகளை இழைக்கும் என யாரும் கருத வேண்டாம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசுக் கட்சி வெளியேறிய போது, தொழில்நுட்ப ரீதியாக தனித்து போட்டியிடப் போவதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஆனால் அதன் பின்னர் திடீரென, நாங்கள் தான் கூட்டமைப்பு, தேர்தலின் பின்னர் கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவோம் என்றும் தெரிவித்தார். இதையெல்லாம் பார்த்த போது, சுமந்திரன் வழக்கம் போல பொய் சொல்கிறார் என்றுதான் தோன்றியது.

தனிக்கட்சியொன்று எப்படி கூட்டமைப்பாகும் என்ற சந்தேகம் பலருக்குமிருந்தது. தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவும் அந்த சந்தேகத்தைப் பகிரங்கமாக எழுப்பியிருந்தார். தனிக் கட்சி ஓன்றைக் கூட்டமைப்பு என குறிப்பிட முடியாதென்பது சாதாரண அறிவுள்ள எல்லோருக்குமே தெரியும்.

சுமந்திரன் ஜனாதிபதி சட்டத்தரணி இந்த விவகாரத்தில் பொய் சொல்லவில்லை. நாங்கள் தான் கூட்டமைப்பு, தேர்தலின் பின் கூட்டமைப்பாகச் சேர்ந்து செயற்படுவோம் என அவர் சொன்னது, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணையப் போவதைத்தான் என்பது இப்பொழுது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.

இது திடீரென நடந்த நிகழ்ச்சியல்ல. கரைத்துறைப்பற்று பிரதேசசபையில் தமிழ் அரசுக் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால், முஸ்லிம் சுயேச்சைக்குழுவின் தாராசு சின்னத்தில் போட்டியிடவில்லை. இது நீண்டகால திட்டம்.

இதே தராசு சின்னத்தில் வேட்புமனு மன்னார் நகரசபையில் நிராகரிக்கப்பட்ட போது, அதற்காக முன்னிலையானதும் சுமந்திரன் தான்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!