உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலைத் திட்டமிட்டபடி எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி நடாத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அண்மையில், ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தரவினால் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதால் நாட்டுக்கோ, பொதுமக்களுக்கோ எந்தப் பயனும் ஏற்படாது என சுட்டிக்காட்டியுள்ள அவர், தேர்தலை தடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
அத்துடன், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலைத் தாமதிக்காது நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட கோரி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்தநிலையில் குறித்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி சபை தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேர்னல் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலிப்பதா இல்லையா என்பது தொடர்பான மேலதிக விசாரணையை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.