இணையத் தொடர்புகள் முழுமையாக வழமைக்குக் கொண்டுவர திட்டம்

அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்பை நாளைய 4ஆம் திகதிக்குள் முழுமையாக வழமைக்குக் கொண்டுவர முடியும் என எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த இலக்கை அடைய டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பெரும் முயற்சி எடுத்து வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்று 2ஆம் திகதி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் மேலும், மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 11 இடங்களில் மாகாணத் தொடர்புகளை வழங்கிய பைபர் வலையமைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அவற்றில் 09 இடங்கள் 24 மணி நேரத்திற்குள் அமைச்சின் நேரடித் தலையீட்டில் சரி செய்யப்பட்டுள்ளன.

தற்போது அனைத்து மாகாணங்களையும் இணைக்கும் தொலைத்தொடர்பு செயல்முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட சில இடங்களைத் தவிர ஏனைய இடங்களில் பைபர் வலையமைப்பு மூலம் தொடர்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஏற்பட்ட மின் தடைகள் மற்றும் பைபர் இணைப்புத் துண்டிப்பினால் 4,000க்கும் அதிகமான பிரதான அலைபரப்பு கோபுரங்கள் செயலிழந்தன.

தற்போது அவற்றில் 2,800 இற்கு அதிகமானவை மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளன. எஞ்சியவற்றில் 949 கோபுரங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செயலிழந்துள்ளன. ஏனைய அனைத்து இடங்களையும் மீண்டும் இயங்க வைப்பதற்காகத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மிக வேகமாகச் செயற்பட்டு வருகின்றன.

தொலைத்தொடர்புக் கோபுரங்களுக்கு விரைவாகச் சென்று தேவையான மின் வசதிகளை வழங்குவதற்கு முப்படையினரின் அதிகபட்ச ஒத்துழைப்பு கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 28 அன்று அனர்த்தம் ஏற்பட்ட போது, தொலைபேசித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டாலும், SMS அனுப்புவதற்கான வசதியை ஏற்படுத்தத் தேவையான தொழில்நுட்பத்தை நாங்கள் தயார் செய்தோம். எனினும், 29 ஆம் திகதி பைபர் தொடர்புகள் கணிசமான அளவு சீரமைக்கப்பட்டதால் அது தேவைப்படவில்லை.

தற்போது நுவரெலியா, பதுளை, புத்தளம் மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் பிரச்சினைகள் நிலவுகின்றன. அவற்றில் நுவரெலியா மற்றும் கண்டியில் குறிப்பிடத்தக்களவு பிரச்சினைகள் உள்ளன.

நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் நாளை காலைக்குள் 75%க்கும் அதிகமான தொடர்புகளைச் செயற்படுத்த எதிர்பார்க்கிறோம். அத்துடன் கண்டியில் தற்போதுள்ள 65% எனும் அளவை நாளை காலைக்குள் 70% வரை கொண்டுவர எதிர்பார்க்கிறோம்.

தற்போது 80%க்கும் அதிகமான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. நாளைய தினத்திற்குள் அதனை 100% வரை சீரமைக்க முடியும் என்று நம்புகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!