சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதற்காக புதிய நிபந்தனைகளை உள்ளடக்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று 24ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்ட போதிலும், 2013ஆம் ஆண்டு இல. 02 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின் விதிமுறைகளை மீறி குறித்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இலங்கை சுங்கத்தில் சிக்கியுள்ளன.
இந்த புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, இறக்குமதி செய்யப்பட்ட நாட்டைத் தவிர வேறு ஒரு நாட்டில் திறக்கப்பட்ட கடனுறுதி ஆவணங்கள் (cross-border LC) தொடர்பான ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க அனுமதி வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த வாகனங்களை விடுவிப்பதற்கும் பதிவு செய்வதற்கும் பல நிபந்தனைகள் இவ் வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
