வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து இருபத்தைந்து நாள்கள் நடைபெறவுள்ளது.
கொடியேற்றத்துக்காக மரபார்ந்த முறைப்படி கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வும், பைரவர் சாந்தி உற்சவமும் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.
அதன் படி யாழ்ப்பாணம் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்று காலை நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து சிறிய தேர் ஒன்றில் கொடிச்சீலை பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து செல்லப்பட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்து. கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.
அதேநேரம், பைரவர் சாந்தி உற்சவம் இன்று மாலை இடம்பெற்றது. ஆலயத்திலுள்ள பைரவப் பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, பைரவப் பெருமான் வெளிவீதி உலா வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்.
நல்லூர் ஆலய மகோற்சவம் நாளை 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.
மகோற்சவத்தின் 10ஆம் திருவிழாவான மஞ்ச திருவிழா எதிர்வரும் 07ஆம் திகதியும் , 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட்19ஆம் திகதியும் , 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி காலையும் , 22ஆம் திகதி காலை தீர்த்த திருவிழா இடம்பெற்று , மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறவுள்ளது.
