மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். .
வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்குப் பிரசன்னமாகவிருந்தவர்களை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட நால்வர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இரண்டு பேர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்திருந்ததாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அசாத் ஹனீபா தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் இருவரும் நொச்சிக்குளம் பகுதியைச் ஆண்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். உயிரிழந்தவர்கள் 50 மற்றும் 61 வயதுடையவர்களாவர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேரில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் 42 வயது மதிக்கத்தக்கவராவார்.
காயமடைந்த 38 வயதுடைய பெண் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தப் பெண் வேறொரு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்ததவர் என ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உந்துருளியில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதேவேளை – இந்த தாக்குதல் சம்பவமானது, 2022ஆம் ஆண்டு உயிலங்குளத்தில் நடைபெற்ற படுகொலைகளுடன் தொடர்புபட்டதாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதி உயிலங்குளத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி சவாரி தொடர்பான முறுகல் ஒன்றை அடுத்த ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக 2023ஆம் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி மன்னார் அடம்பன் பகுதியில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாகவே இன்றைய தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மன்னார் பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.