வெடுக்குநாறிமலை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

வவுனியா, வெடுக்குநாறிமலையில்  கடந்த சிவராத்தி தினத்தன்று இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்றைய தினம் விசாரணைகளை முன்னெடுத்தது.

குறித்த விசாரணையில் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள், மற்றும் ஆலயத்தின் செயலாளர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆலயத்தின் செயலாளர்  ”நாங்கள் தொல்லியல் இடங்களை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினர் சில ஆவணங்களை வழங்கியிருந்தனர்.குறிப்பாக மலை உச்சியில் தீ மூட்டியதாக ஒரு விடயத்தை முன்வைத்திருந்தனர்.

அதனாலேயே கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நாங்கள் அதனை எரித்தமைக்கான எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கபடவில்லை. அத்துடன் அவர்களது கருத்துக்களில் முரண்பாடுகள் காணப்பட்டன. அத்துடன் தீமூட்டியதாக இவர்கள் காட்டிய புகைப்படமானது முதல்நாள்இரவில் அங்கு காவல் கடமைகளில் இருந்த நெடுங்கேணி பொலிஸார் கொழுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

அந்த புகைப்படத்தினையே அவர்கள் இங்கு சமர்பித்திருந்தார்கள். இது முற்றிலும் பொய்யானது. இதனை நாம் சுட்டிக்காட்டினோம்” என ஆலயத்தின் செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த விசாரணை தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதுடன், வரும் நாட்களில் நெடுங்கேணி பொலிஸார் மற்றும் வனவளத்திணைக்களத்தினரும் அழைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!